ஞாயிறு, ஜூலை 02, 2017

சனிக்கிழமை சாமியாரும் குளிப்பும்!!





🚿சனிக்கிழமை சாமியாரும் குளிப்பும்!!



சின்ன வயதில் பொதுவா குளிக்கிறதெண்டால் கனபேருக்கு கள்ளம். அப்படியான "குளிக்கிறதுக்கு கள்ளப்பட்ட"சங்கத்தின் நிரந்தர உறுப்பினரில் சாமியாரும் ஒருவர் என பெருமையாக குறிப்பிடுகிறேன்.
முந்தி ஊரில கிணத்தில வாளியாலதான் அள்ளிக்குளிக்கவேணும்.
உறுமாண்டத்தோட சுதந்திரமா குளிப்பது "சுகானுபவம்"!
சாமியாரின் அப்பாதான் பொதுவா சாமியாரை குளிப்பாட்டுவார். சின்னப்பொடியளுக்கு குளிக்க வாக்கிறது சும்மா சிம்பிள் வேலை இல்லை. அதில கன "ரெக்னிக்" இருக்கு.
முதல் வாளி தண்ணீர் சரியா குளிரும். அதனால அந்த முதல் வாளி தண்ணியை தலையில வாக்கும் போது "கொடுமையான குளிர்" கொல்லும்.
அதுக்காக முதல் வாளி தண்ணீர் குளிராமல் இருக்க சாமியாரின் அப்பா ஒரு "யோசனை" சொன்னார்.
சாமியாரும் அந்த "திறமான சிந்தனையை" இன்றுவரை பின்பற்றுவதால் முதல் வாளி தண்ணிர் இப்போதும் குளிராக இருப்பதேயில்லை!
அது என்ன "மகிந்த சிந்தனை" எண்டு மண்டையை குழப்பாதையுங்கோ.

"முதல் வாளி தண்ணீர் தானே குளிரும். அதை வெளியில ஊத்திப்போட்டு ரண்டாவது வாளி தண்ணீரை தலையில ஊத்தினா குளிராது"
(கடுப்பாகதையுங்கோ... மகிந்த சிந்தனை போல இதுவும் மொக்கைதான்)
ஊரில பொதுவா எப்பிடியும் சின்ன தண்ணீர்த்தொட்டி கிணத்தடியில இருக்கும். அதோட சேத்து உடுப்பு தோய்க்க கல்லும் இருக்கும்.
தொட்டிக்குள்ள தண்ணீரை ஊத்தி அதுக்குள்ள இறங்கி கூத்தடிப்பது பெரும் சந்தோசம்!

"டேய் காணும் குளிச்சது வா" எண்டு அம்மா கத்தினாலும்..
"பொறணை இன்னும் ஒரு அஞ்சு நிமிசம்" எண்டு சொல்லிவிட்டு தொட்டிக்குள் சுழியோடுவதில் ஒரு பெரும் சந்தோசம்!
தொட்டியின் தண்ணீர் போகும் ஓட்டையை அடைக்க "தேங்காய்ப்பொச்சு" பாவிப்பம். அவசரத்துக்கு சாமியார் தன்ர காச்சட்டையை கழட்டி சுத்தி அடைச்சுப்போட்டு உறுமாண்டத்தோட குளிச்சும் இருக்கிறார்.

தொட்டிக்குள்ள தண்ணி ஊத்தும் போது 50 வாளி, 100 வாளி எண்டு எண்ணி எண்ணி ஊத்துவம்.
உப்பிடித்தான் ஒரு நாள் உரிஞ்சாங்குட்டியோட சாமியார் கிணத்தடியில் குளிச்சுக்கொண்டிருந்தார்.
தப்பா நினைக்காதையுங்கோ.. அப்ப சாமியாருக்கு 6 வயது.
"நல்லிணக்க அடிப்படையில்" அன்று அவரது அம்மாவே குளிக்க வார்ப்பதற்கான ஆயத்தங்களை செய்தார்.

பொதுவாக சாமியாருக்கும் அம்மாவுக்கும் இடையில் "புடுங்குப்பாடு" எப்பவும் இருக்கும்.
வடக்குமாகாண சபை போல!
தொட்டிக்குள்ள எத்தினை வாளி தண்ணீர் ஊத்த வேணும் எண்ட "தீர்மானத்தில்" ஆரம்பிச்சது பிரச்சினை.
50 வாளி ஊத்தியாச்சு எண்டு சொன்னா!
ஆனால் சாமியார் ஒத்துக்கொள்ளவில்லை.காரணம் தொட்டிக்குள்ள உள்ள தண்ணீர் மட்டத்தை வைச்சு சாமியார் 50 வாளியா அல்லது 40 வாளியா எண்டு கண்டுபிடிச்சு விடுவார்.
சின்னனிலேயே "உப்பிடியான கணக்கில" சாமியார் "பேக்காய்".
ஆரும் லேசில சுத்தேலாது!
"குளிக்கிற தண்ணியோ.. குடிக்கிற தண்ணியோ?" என்னண்டாலும் "தண்ணியில" ஊழல் செய்வது சாமியாருக்கு பிடிக்காது.

தொட்டியில ஊத்தின தண்ணி வாளிக்கணக்கில் ஊழல் செய்தது பெத்த அம்மா எண்டாலும் பிழை பிழை தான்.
அம்மா சொன்னா ;
"உன்ர கணக்குக்கு எல்லாம் என்னால நிண்டு ஆடேலாது. கெதியில குளிச்சிட்டு வா"
என்ன செய்ய... சாமியார் அம்மா எண்டதால பொறுத்துக்கொண்டு குளிச்சார்.
ஆனால் திரும்பவும் அம்மா தொட்டிக்குள்ள இருந்த தண்ணியை தன்ர உடுப்புத்தோய்க்க எடுத்ததில ஆரம்பிச்சுது சண்டை!
"என்ர தண்ணியை ஏன் என்னைக்கேக்காமல் எடுத்தனீ?" என சாமியார் கேட்டார்.
(சின்ன வயசிலேயே சாமியார் தண்ணீர் பிரச்சினையில் கடுமையா குரல் கொடுத்தவர் என்பதை ஒருசிலர் குறிப்பெடுக்கவும்)

அதுக்கு அம்மா சொன்னா...
"இஞ்ச உன்ர தண்ணி .. என்ர தண்ணி எண்டு ஒண்டும் இல்லை. கிணத்துக்க இருக்கிற பொதுத்தண்ணி"
"தொட்டிக்க இருக்கிறது என்ர தண்ணி. வேணுமெண்டா சொல்லிப்போட்டு எடு.....ஆனால் என்னைக்கேக்காமல் எப்பிடி எடுப்பாய்" சாமியார் கத்த...
அம்மா கடுப்பாகி வேலியில் இருந்த பூவரசு காம்பை முறிச்சு சாமியாரின் குண்டியில் குழறக்குழற அடிக்குடுத்தா!

பொதுவாக சாமியார் எல்லா இடத்திலும் "கடைசியில் அடிவாங்குவது" சின்னனிலையே இருந்து இருக்கு!

அடிவிழும் வேதனையில் ஆத்திரத்தின் உச்சத்தில் "கெட்ட வார்த்தை" ஒன்றை வாய் தவறி சொல்லிப்போட்டார் சாமியார்!
பிறகென்ன...
மலேசியாவிலும் வன்னியிலும் பிள்ளையை அடிச்சு கொடுமைப்படுத்தும் தாய் எண்டு ஒரு வீடியோ உலவினது. அதென்ன அடி... சாமியாருக்கு விழுந்த அடியை பாத்திருந்தா இரத்தக்கண்ணீர் வடிச்சிருப்பியள்.
அடியின் உச்சத்தில் வலி தாங்காத சாமியார் வீட்டை விட்டு வெளிநடப்பு செய்தார்.
நடை இல்லை ஓட்டம்!
உரிஞ்சாங்குண்டியோடு சவுக்காரம் பூசின அரைவாசியோட சாமியார் ஒழுங்கைக்குள்ள இறங்கி மெயின் றோட்டில ஏறினார்.
சாமியார் அந்த நேரமே "நிர்வாண சாமியார்" !!!

ஐயோ பிள்ளை ஓடுதே எண்டு அப்பதான் அம்மாக்கு அன்பு வந்து பின்னால ஓடி வந்தா....

"நில்லு அடிக்கமாட்டன்" எண்டு அம்மா சொன்னாலும் அதை நம்பும் நிலையில் சாமியார் இல்லை.
தடியை பின்னுக்கு ஒழிச்சு வைச்சுக்கொண்டு "அடிக்கமாட்டன்" எண்டா எப்பிடி நம்புறது.

அம்மா பிடிக்க துரத்த சாமியார் ஓடுவதும், அம்மா நிக்க சாமியார் நிப்பதுமாய் இந்த "ஓட்டப்போட்டி" பள்ளிக்கூட பிரதான வீதிவரை நீண்டது.

ஊரில உள்ள சனம் சாமியாரைப்பாத்து சிரிச்சுப்போட்டு போனார்கள். ஒருத்தனும் உதவி செய்யவில்லை.

இதில பெரிய அவமானம் என்னண்டால்....
சாமியார் உரிஞ்சாங்குட்டியுடன் ஓடுவதை சாமியாருடன் நேசறியில் படிச்ச பிள்ளை பாத்து "கொடுப்புக்குள்ள" சிரிச்சிட்டுப்போனாள்.
இதுவே சாமியாருக்கு மிகப்பெரிய "அவமானம்".

திடீரெண்டு சாமியாரை பின்வளத்தால் ஒருத்தர் கட்டிப்பிடிச்சு தோளில் போட்டு தூக்கிக்கொண்டு அம்மாவிடம் போனார்.

அவர் சாமியாரின் ஒரு "மாமா"!
"மருமோன் ... என்ன இது கோலம். உப்பிடி நிண்டியள் எண்டா என்ர மகளை எப்பிடி உனக்கு கட்டித்தாறது?"

அவர் கேட்ட கேள்வி நியாயம் தான்!

ஆனால் அதை புரிஞ்சு கொள்ளும் வயசில் சாமியார் இருக்கவில்லை.
குண்டுக்கட்டாய் தூக்கப்பட்ட சாமியார் அம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
செவியில் பிடிச்சு இழுத்து வரப்பட்ட சாமியாருக்கு வீட்டுக்குள் வைச்சு..
"முறையாக" பூசை நடந்தது.

சாமியாருக்கு சின்ன வயசில் இருந்தே "தண்ணியில" கண்டம்!
அதைவிட அவருக்கு "வாயிலையும்" கண்டம்.

சும்மா எல்லாத்துக்கும் "கருத்துக்கூறி" வாங்கிக்கட்டுவது சாமியாரின் வழமை!

குளிக்கும் போது அம்மாவிடம் அடி வாங்கிய சம்பவம் நடந்து 30 வரிசம் ஆச்சு!

திரும்பவும் அதே ஒரு சம்பவம் இண்டைக்கு நடந்தது!!

"இஞ்ச ... சனிக்கிழமை உந்த போனை நோண்டிக்கொண்டு இருக்கிறதை விட்டிட்டு உடுப்புகளை வோசிங் மெசினுக்குள்ள போட்டிட்டு.. தலைக்கு எண்ணை வைச்சு வடிவா முழுகி குளியுங்கோ"
இப்படி " கட்டளை" பிறப்பிக்கப்பட்டது.

இந்த நேரத்தில் தான் "குளிக்கும் போது" அடிவாங்கிய பழைய நினைவு வந்து போனது.
இதைச்சொன்ன சாமியாரின் மனிசிக்கும் அம்மாவுக்கும் இடையில் ஒரே ஒரு வித்தியாயம் தான் இருந்தது!

அந்த நேரம் அம்மாவின் கையில் "பூவரசந்தடி"!
இப்ப மனைவியின் கையில் கூட்டுற "தும்புத்தடி"!

30 வருசமாச்சு சாமியார் இன்னும் திருந்தவேயில்லை.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Recent Posts Widget

Facebook Badge