சிந்தனையில் தீ வை...!!! ---------------------------------------
தமிழகம் என் தாய் வழி உறவடா...
தம்பிகளா நீங்களெல்லாம் எங்களின் தொப்புள்கொடி உறவடா.
வேண்டாம் இந்த தீக்குளிப்பு போதும் இதுவரை கண்ட இழப்பு.இனியும் தாங்கமுடியாது இனியொரு உரியிழப்பு.
முத்துக்குமார் இட்ட தீயை - உன் நெஞ்சினில் ஏந்து உன் மேனியில் அல்ல..!!!
உன் மேனியில் இட்ட தீ ஒரு வீரத்தமிழனை அழிக்கும்... உன் கண்களில் தீயை வை ;உன் நெஞ்சினில் விடுதலை தீயை பற்ற வை -அது ஆயிரம் தமிழனை வாழவைக்கும்.
உயிரை விடாதே உன் உணர்வை தா...
என் சகோதரா!! தீக்குளிக்க வேண்டியவன் நீயல்ல...
நில் ..!!!சிந்தனையில் தீ வை. தீயினை கண்களில் கொழுத்து உன் மேனியில் அல்ல...!!!
உனக்கே புரியும் எரிக்க வேண்டியது உன்னையல்ல...!!!
இதில் எதுவுமே சோரம் போகாத; யாருக்கும் அடிபணியாத; எவனுக்கும் விலைபோகாத உறுதியோடு பார்த்துக்கொள்ளுங்கள்.
தங்கைகளே உங்களின் கோபங்களின் வீரியம்..!! தம்பிகளா உங்களின் ஒற்றுமை..!! தங்கைகளே உங்களின் கொள்கையின் நம்பிக்கை..!!
நம்புகிறோம் இப்போதும் உங்களைத்தான். நமக்கென்று யார் இருக்கிறார் உங்களை விட்டால்...!!! நம்புகிறோம் உங்களின் கண்களில் தெரியும் கோபத்தை...
நம்புகிறோம் உங்களின் வார்த்தைகளின் ஆழங்களை..நம்புகிறோம் உங்களின் உணர்வுகளின் உண்மைகளை... நாங்கள் நம்பிக்கையை எப்போதும் கைவிட்டதில்லை.. அதனால்த்தான் ஈழத்தமிழன் இன்னும் உயிர் வாழ்கிறான்.
தொப்புள் கொடி உறவுகளே...
கண்ணகி இட்ட தீ மதுரையை எரித்ததோ இல்லையோ.. முத்துக்குமார் இட்ட தீ தமிழத்தில் எரிகிறது....!!!
தியாகி திலீபனும் முத்துக்குமாரும் ஏற்றிய தீபம் எண்ணையை ஊற்றி ஏற்றவில்லை அவர்கள் தங்களையே ஊற்றி ஏற்றிய தீபம்...!!
அணையாத தியாக தீபங்கள் யாரும் அணைக்க முடியாத அமர தீபங்கள்...!!
ஈழம் எங்களுக்கு தாய் தமிழகம் எங்களுக்கு பெரிய தாய் உறவு தம்பிகளா நீங்களெல்லாம் எங்களின் பெரியம்மா பிள்ளைகள். எங்களின் வலிகளிலும் சோகங்களிலும் உங்களுக்கும் பங்கு .
அடக்குமுறைகளும் அதிகார வெறியாட்டங்களும் உங்களுக்கு புதிதல்லவே... அட எதற்கு நீ அஞ்சவேண்டும் -கொஞ்சம் உரத்தே கேள்... !
அரசியல் பேசும் அசிங்கங்கள் சிலரை அருகிலும் அண்டாதீர்கள் .அவர்களின் அழுக்கு ஒட்டாமல் பழகு. துரோகிகளை கண்டால் தூர விலகு.
மாணவன் என்றால் வெள்ளை அழகு. நிமிர்ந்து நில் உன் கொள்கையும் அழகு.
விடுதலை தீயினை கண்களில் கொழுத்து உன் மேனியில் அல்ல...!!!
மாணவன் என்றால் மாற்றங்கள் என்று... தீமையின் ஆயுளை மாற்றி எழுது.
உங்கள் உயிர்களை கருக்காதீர்கள்... தமிழகமே எங்களுக்காக உணர்வுகளை கொடுங்கள்.
தமிழனுக்காய் நீதி கேளுங்கள் உலகத்திடம் எங்களின் உரிமையை கேளுங்கள்... உண்மையை உரத்து கேளுங்கள்.
ஒற்றுமையாய் நின்று கேளுங்கள். ஒயாமல் போராடிக் கேளுங்கள். தமிழகமே...!!! ஈழம் உங்களின் தாய் வழி உறவு எங்களின் வலிகளிலும் உங்களுக்கும் பங்கு.
#தமிழ்ப்பொடியன்
குறிப்பு: 2009 களில் எம் தாயகத்தில் நிகழந்த இனப்படுகொலையை கண்டித்து; தமிழகத்தில் பலர் தீக்குளித்தார்கள். அப்போது எழுதிய கவிதை இது.