சனிக்கிழமைசாமியாரும் கலியாண வீட்டு வீடியோவும்!!
கலியாண வீட்டுக்கு வீடியோக்கு ஆரைப்பிடிக்கிறியள் எனும் கேள்வி மிக முக்கியமானது.
அது அந்தக்காலத்தில் என்ர மூத்தக்காவின் சாமத்தியவீட்டில் இருந்து இன்று என் நண்பனின் கலியாணம் வரை "அதே கேள்வி" விதம் விதமாய் கேக்கப்படுகிறது.
அந்தக்காலத்தில் தெரிவுகள் குறைவாய் இருந்ததால் ஒண்டு பருத்தித்துறையில் உள்ள "ராசன் வீடீயோ" அல்லது அச்சுவேலி "ஒளியருவி" தான். இல்லாட்டில் "புலவர் வீடியோ".
ஆனால் இப்ப இஞ்ச வெளிநாடுகளில் பெரிய பிரச்சினை என்னண்டா மணப்பந்தல் சோடினையில இருந்து வீடியோ வரை கனக்கப்பேர் வைச்சிருக்கினம்.
இதில பெரிய சிக்கல் என்னண்டா;
ஆரைப்பிடிக்கிறது? என்பதுதான்.
அவரைப்பிடிச்சா இவருக்கு கோவம்..
இவரைப்பிடிச்சா அவருக்கு கோவம்..!
முந்தி ஊரில கலியாண வீடியோ எண்டால் பெரிய புதினம்.
வீடியோவுக்கு ஆரை முதல் "நிக்கிறதுக்கு"கூப்பிடுறது எண்டதிலேயே பிரச்சினையாகி "வெட்டுக்குத்தெல்லாம்" நடந்திருக்கு. அதே கோதாரி விழுந்த சம்பிரதாயம் இப்பவும் கனடாவுக்கும் வந்து மாறாமல் இருப்பதுதான் பெருங்கேவலம்.
"சாப்பிட்டியளா? "எண்டு கேக்க மறந்தாலும் ;
"போட்டோ எடுத்தியளோ" என கேப்பதை மறக்கமாட்டினம்.
சாப்பாட்டுக்கு நிக்கிற கியூவை விட போட்டோவுக்கு நிக்கிற கியூதான் பெரிசு. அதிலையும் முதல் போறதுக்காக இடையில பூருற ஆக்களை கண்டால் சாமியாருக்கு கடும் கோபம் வரும்.
ஒரு சிலர் இப்பவும் போட்டோவுக்கு நிக்கமாட்டம் எண்டு "லெவல்" காட்டுவினம். அது அந்தக்காலத்தில் இருந்து இந்தக்காலம் வரை இருக்கு.
"கூட்டிக்குறா" பவுடரையும் அப்பி தலை நிறைய எண்ணையையும் வைச்சு;
ரட்டை பின்னலையும் பின்னி;
சிவத்த ரிப்பன் கட்டி வீடியோவில் நிற்கும் அழகே அழகு.
நித்தியகல்யாணி, கனகாம்பர கொண்டைகளில் அந்தக்காலத்தில் பெண்கள் தனியழகு!
அதை close up இல வீடியோ எடுக்கும் விதமே தனி அழகு.
சாப்பிடும் போதும்.. சாப்பிட்ட விரலை சூப்பும் போதும் அதை closeup இல எடுத்து போடுவினம்.
அது பெரும்கொடுமை.
அதில வேற ஆக்களை close up இல காட்டி பயமுறுத்துவாங்கள்.
ஒரு long shot, ஒரு close up. இதுதான் அந்தக்கால வீடியோ.
ஆனால் இப்ப கிறேன் எண்டுறாங்கள். பறக்கிற கமரா எண்டுறாங்கள்.
Slow motion, wide angle, close up, arial shoot எண்டுறங்கள்.
ஒரு கோதாரியும் விளங்குதில்லை.
அந்தகாலத்து வீடியோவுகளில் பெரும்பாலும் கலியாண மாப்பிளை பொம்பிளையை slow motion இல ஓட விடுவினம்.பூமரங்களுக்கு முன்னால நிக்கச்சொல்லுவினம். செவ்வரத்தம் பூவை பிடிச்சு முகத்துக்கு கிட்ட ஆட்டச்சொல்லி வீடியோ எடுப்பினம்.
அதிக பட்ட graphics ஆக ஒரு ஆளை நாலைஞ்சா காட்டுவதும் அல்லது விளையாட்டு ஹெலியில பறக்கவிடுவதும் தான்.
அதைவிட செத்த ஆக்கள் அல்லது கலியாணத்துக்கு வரமுடியாத உறவுகளை போட்டோவில் "இணைப்பது" மிக முக்கியம்.
உப்பிடித்தான் சனிக்கிழமை சாமியாரின் கலியாணம் இந்தியாவில் திருச்சியில் நடந்தது.
கலியாணவீட்டுக்கு ரண்டு நாள் முதல்த்தான் மாப்பிளையான சாமியார் போய் இறங்கினார்.
சாமியாரின் ஒல்லியான கறுத்த உருவத்தை பார்த்த ஊர்ச்சனம் அவர் அவுஸ்திரேலியாவில் இருப்பதை நம்ப மறுத்தது.
அதனால் "பலரின்" வேண்டுகோளை ஏற்று "gold facial " செய்தார் சாமியார். அப்பதான் போட்டோவுக்கும் வீடியோவுக்கும் வடிவா இருக்கும் என்பதால்.
கலியாண வீட்டுக்கு போட்டோ எடுக்கும் போது casual ஆக இருக்கவேணும் என்பதாலும்;
முகத்தில் பயத்தை வெளிக்காட்டகூடாது என்பதற்காகவும்...
சாமியார் ஒரு சின்ன technique பாவித்தார்.
ஒரு bubble gum வாங்கி அதை சப்பிக்கொண்டும் சிரிச்சு சிரிச்சு கதைச்சுக்கொண்டும் இருந்தார்.
கடைசியா வீடியோவை பாக்கும் போது ஆடு இலைகுழையை அரைச்சு தின்னுற மாதிரி இருந்தது!
அசிங்கப்பட்டார் சாமியார்!!!
வெளிப்புற படப்பிடிப்பு( outdoor shooting) எடுப்பதற்கு திருச்சியின் ஒரு பழைய பூங்காவுக்கு போனார் சாமியார்.
அங்கே பூமரங்களுக்கு நடுவிலும் மரத்துக்கு பின்னாலும் ஓடிப்பிடிச்சு விளையாடுவதை படமாக்கினார்கள்.
பழைய பாக்கியராசாவின் படங்களிலும் பாரதிராசாவின் படங்களிலும் எப்படி பாட்டுக்கட்டங்கள் இருக்குமோ...
அதைப்போலவே அச்சொட்டாய் படமாக்கினார்கள்.
பூங்காவின் மூலையில் ஒரு "சறுக்கீஸ்" உம் ஊஞ்சலும் இருந்தது.
ஊஞ்சலில் மாறி மாறி இருத்தி ஆட்டிவிட்டு எடுத்தார்கள்.
அதைவிட கொடுமை "சறுக்கீசில்" இரண்டுபேருமா சறுக்கவிட்டும் எடுத்தார்கள்.
சுமார் மூண்டு மணித்தியாலமா கதறக்கதற வீடியோ எடுத்தார்கள்.
கடைசியா long shot இல நடக்கவிட்டு திரும்பி "டா டா" காட்டுவதோடு எங்களின் திருமண வீடியோ இனிதே நிறைவு பெறும்.
கடைசியா போட்டோவும் வீடியோவும் வந்தபோது....
ஒல்லிப்பயித்தங்காயான சாமியார் போட்டோவுகளில் "மன்மதக்குஞ்சாய்" அழகாக இருந்தார். வீடியோவில் பாட்டுக்கட்டம் மட்டும் பெரும் "காமெடியாக" இருந்தது.
அதுவும் "கண்கள் இரண்டால்.." எண்ட நாடோடிகள் படப்பாட்டை பார்க்கும் போதெல்லாம் சிரிப்பு சிரிப்பா வரும்.
ஆ... சொல்லமறந்திட்டன்..
கூலிங்கிளாஸ் போட்டு நெத்தியில கொஞ்சி இப்பிடி வழமையான விளையாட்டுகள் காட்டியும் போட்டோவுகளும் வீடியோவும் எடுத்தம்.
அந்த "து(அ)ன்பியல்" சம்பவம் நடந்தது 2010 களில்.
ஆனால் இப்பவும் அதே பழைய passion இல தான் வீடியோ எடுக்கினம்.
மரத்தை சுத்தி ஓடுவதும்...
கூலிங்கிளாசை கழட்டி மாட்டுவதும்..
பொம்பிளையை தூக்கி சுத்துறதும்..
நெத்தியில கொஞ்சுறதும்...
மூக்கையும் மூக்கையும் தேய்க்கிறதும்...
BMW காருக்கு முன்னால நிண்டு தெறிக்கவிடுவதுமாய்த்தான் இப்பவும் வீடியோ, போட்டோ எடுக்கினம்.
அந்தக்காலத்தில் பருத்தித்துறை ராசன் வீடியோ செய்த graphics இல ஒரு சதவீதம் கூட இருக்காது.
ஹெலியில , விளையாட்டு காரில போற மாதிரி ஏலுமெண்டா செய்து காட்டுங்கோ பாப்பம். ஏலாது உங்களால....
ஆனால் கேட்டால் அதெல்லாம் பழைய fassion எண்டுவியள்.
உப்பிடித்தான் சாமியார் போனவருசம் இதெ மாதம் அவரது "பால்ய"நண்பன் ஒருவனின் கலியாணத்துக்கு சென்னை போனார்.
"தனியாத்தான்" போனவர்.lol
சாமியாரின் நண்பன் "சுழையா"40000 ரூபாய் வீடியோக்காரனுக்கு எண்ணிக்குடுக்கும் போது;
தலையில அடிச்சு சொன்னார்.
"மச்சான் காசை முதல்ல குடுக்காத..
போட்டோ தரமாட்டங்கள்" எண்டு.
பொதுவாக சாமியார் சொல்வது "பலிக்கும்".
காரணம் சாமியாருக்கு "பட்ட அறிவும்" "பார்த்த அனுபவமும்" கனக்க!
இப்ப முழுசா ஒரு வரியம் ஆகப்போகுது. அல்பமும் இல்லை... வீடியோவும் இல்லை!
அவன் இந்தியாவுக்கு போன் அடிச்சா "மோடிஜீ" தான் கதைக்கிறாராம்.
(ஹிந்தியில ரெக்கோடிங் போகுது)
அண்டைக்கு எனக்கெடுத்து அழுவாரப்போல கேக்குறான்...
"மச்சான் உன்ர போனில ஏதும் கலியாண வீட்டு போட்டோ இருக்கோ" எண்டு!
அதுக்கு சாமியார் சொன்னார்
"மச்சான் நீ பேசாமல் திரும்பவும் ஒருக்கா இந்தியா போனியெண்டால் வாங்கிப்பிடிச்சிடலாம்"
அதுக்கு அவன் சொன்னான்.
"மச்சான் பிள்ளை பிறக்கப்போகுது. திருச்சி உச்சிப்பிள்ளையாரிலதான் மொட்டை அடிக்கிறதா நேத்திக்கடன். ஒரேயடியா அங்கையே முதலாவது பிறந்தநாள் செய்து அதையும் என்ர கலியாணவீட்டு வீடியோவில் இணைச்சுவிடுவம்"
சாமியார் அவனை நினைத்து பரிதாபப்பட்டார்.
அடுத்த வரிசமாவது அவனது கலியாண வீட்டு வீடியோ கிடைக்க எல்லாம் வல்ல "மதவடி வைரவர்" துணைபுரியட்டும்.
முக்கியகுறிப்பு: சாமியாரின் கலியாணவீட்டு வீடியோ "ஆதீனத்தின்"தணிக்கைகுழு கைகளில் சிக்கியிருப்பதால் அதை வெளியிடுவதில் "பெரும்சிக்கல்" இருப்பதை மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.