ஞாயிறு, ஜூலை 02, 2017

சனிக்கிழமைசாமியாரும் படலையும்!!


எங்கட ஊரில "படலைகள்" காணாமல்ப்போய் "கேற்றுகள்" வந்திட்டுது.
அதுவும் வெளிநாட்டுக்காசிலை "லச்சக்கணக்கில்" வடிவான "கேற்றுகளை" காணக்கூடியதா இருக்கு.
"படலைகள்" என்பது தமிழர்களின் பண்பாட்டு அடையாளம்.
-அலம்பல் படலை
-பனம் மட்டை படலை
-மூங்கில் படலை
-தென்னம் மட்டை படலை
-கிடுகுப்படலை
-காவோலைப்படலை
-பலகைப்படலை
"தானாகச்சாத்தும் படலைகளை- automatic padalai" தமிழன் அந்தக்காலத்திலையே கண்டுபிடிச்சுவிட்டான்.
உப்பிடி கன "படலைகள்" இப்ப கொஞ்சம் கொஞ்சமா காணாமல்ப்போகுது.
"படலை திறந்து வரப்பாடாது நீ"
"படலைக்கு வெளியில போ"
"படலையை இறுக்கிச்சாத்து"
"படலையை ஆவெண்டு திறந்துவிடாதையுங்கோ"
"படலைக்கு படலை"
உப்பிடியான வார்த்தைகளில் "ஆழமான" அர்த்தங்கள் உண்டு.
எப்பவும் வேலியின் உயரத்துக்கு கொஞ்சம் மேலதான் "படலை" இருக்கும்.
எங்கட ஊரில பொதுவா படலைகளை உள்பக்கத்தால் பூட்டி வைப்பதில்லை.
ஆனால் இண்டைக்கு பல "கேற்றுகள்" உள்ப்பக்கத்தால் பூட்டி இருக்கு.
வீட்டுக்கு வாறாக்கள் முந்தி படலையை லேசில திறந்து உள்ள வருவினம். ஆரும் போய் திறந்துவிட வேண்டியதில்லை.
ஆனால் "கேற்றுகள்" அப்படியில்லை.
எப்பவும் பூட்டியே இருக்கும். ஆரண்டு கேட்டுத்தான் திறந்துவிடவேணும்.
எங்கட பண்பாட்டு மாற்றத்தின் இடைவெளி என்பது கேற்றுக்கும் படலைக்குமான இடைவெளிதான்.
படலைகள் எப்பவும் சத்தம் போடாது.
கேற்றுகள் காலம் போக "கிறீச்சு கிறீச்சு" எண்டு சத்தம் போடும்.
படலைகள் துருப்பிடிக்காது.
கேற்றுகளை திறப்பதைவிட படலைகளை திறப்பது லேசு.
"கொட்டுக்கடப்பு" படலைகளின் இன்னொரு வடிவம்.
இந்தக்கொட்டுக்கடப்புகளை இப்ப எங்கட ஊரில காணக்கிடைக்குதேயில்லை.
தமிழர்களின் பண்பாட்டு மரபு ஒன்று கண்ணுக்கு முன்னே அழிந்தேபோய்விட்டது.
என்னடா சாமியார் இண்டைக்கு படலையோட நிக்கிறார் எண்டு நினைப்பியள்.
படலையில ஏறி குதிரை ஆடி சாமியார் அடிக்கடி குண்டியில "குறி" வாங்கியிருக்கிறார்.
போனமுறை சாமியார் ஊருக்குப்போய் மாமிவீட்ட போனபோது;
கன காலத்துக்குப்பிறகு படலையைக்கண்டதும் அவருக்கு
அதே ஆசை வந்தது.
ஆனால் இந்த வயசில மாமியிட்ட அடி வாங்கிறது அவ்வளவு நல்லா இருக்காது எண்டு அவர் "ஆசையை" அடக்கிக்கொண்டார்.
ஆனால் அடுத்த முறை போகும் போது அடிவாங்கினாலும் பறுவாயில்லை அவற்ற ஆசையை நிறைவேத்தியே தீருவார்.


காதலிச்ச பிள்ளை படலையை சாத்துறதில ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும்.
படலைக்கு வெளிய நிண்டு திரும்பி பாத்து சிரிச்சா அதுக்கொரு அர்த்தம்.
(பிள்ளைக்கு காதல் அரும்புது. கட்டுப்பாடுகளை மீறி வரத்தயார்)
உள்ள போய் மெதுவா படலையை சாத்திப்போட்டு "கொடுப்புக்குள்ள" சிரிச்சா அதுக்கொரு அர்த்தம்.
(பிள்ளைக்கு காதல் பூத்திட்டுது. ஆனால் அப்பா அம்மாவை விட்டு வர விருப்பமில்லை)
படலையை அடிச்சு சாத்திப்போட்டு போனா அதுக்கொரு அர்த்தம்.
(விருப்பமில்லை ஆனாலும் முயற்சி செய்யலாம்)
படலையை திறந்துகொண்டு தாயைக்கூப்பிட்டால் அதுக்கொரு அர்த்தம்.
(இனிமேல் பின்னால வந்தால் பிரச்சினை)
படலையை திறந்துகொண்டு நாயைக்கூப்பிட்டால் அதுக்கொரு அர்த்தம்.
(அந்த கேவலமான அர்த்தத்தை சொல்லவேணுமா?)
படலையை திறந்து ஒரு நடவடிக்கையும் இல்லாமல் உள்ள போனால் அதுக்கொரு அர்த்தம்.
( காத்துகொண்டிருங்கோ ... கொஞ்சத்தால வருவன் எண்டு அர்த்தம்)
சாமியார் இதில் எல்லா அனுபவங்களையும் கண்டுதான் சாமியார் ஆனவர். இதில் பல அனுபவங்களை தன்னுடைய நண்பனுக்காகவும் அனுபவிச்சு இருக்கிறார்.
(சாமியார் நண்பனுக்காய் தன்னுடைய பொக்குளைச்சுத்தி 21 ஊசி மந்திகை ஆசுப்பத்திரியில் போட்டிருக்கிறார்)
வேலி அறுக்கையா இருந்தா படலைகளை பூட்டி வைக்கவேண்டிய அவசியம் இல்லை.
சாத்தி இருக்கலாம்.
பூட்டி வைக்காதையுங்கோ!
அதுவும் உள்ளால பூட்டாதையுங்கோ!!!
இது சாமியாரின் இண்டைய "படலைத்தத்துவம்"


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Recent Posts Widget

Facebook Badge