
உறவுகள் கருகுதையோ...!!!
உலகமே திரும்பிபாரடா....!!!
----------------------------------------
அட கடவுளே...!
என் உறவுகள் சுமக்கும் 'வலி" சொல்ல என்னிடம்
வார்த்தைகளும் இல்லைஇ வழியும் இல்லையே..!
என் தாய்மண் கண்முன்னே கயவர்களால் கற்பழிக்கப்படும்போது...
என் நெஞ்சு பிழந்து குருதி கசிந்து உணர்வுகள் ஓலமிடுகிறது.
என் உடன்பிறப்புக்கள் உயிர்பிழிந்து உடல் மெலிந்து
வானம் கிழிய "காப்பாற்றுங்கோ" என அவலக்குரல் எழுப்ப...
என் குருதி கொதித்து விழியில் நீர் கசிந்து
ஓடிவந்து உங்களின் கைபிடிக்க துடிக்குது என் கரங்கள்.
ஆனாலும்
இயலாமையின் விழிம்பிலும்....!
சுயநலத்தின் போர்வையாலும்....!
காலத்தின் தீர்ப்புகளாலும்....!
கட்டாய புலப்பெயர்வாலும்....!
என் கைகள் கட்டப்பட்டு வாய்மூடி வாழாது 'சும்மா' இருக்கிறேன்.
'தாய்' அழும்போது துடைத்துவிடும் தூரத்தில் என் கைகள் இல்லையே...!
உறவுகள் கலங்கி துணை தேடும் போது தோள் கொடுக்க எனக்கு 'நாதி' இல்லையே...!
இதை நினைக்கையிலே வெட்கிதலைகுனிந்து விம்மி அழுகுதடா நெஞ்சு...!
உறவுகள் கருகுதையோ...!!!
உலகமே திரும்பிப்பாரடா....!!!
சின்னத்தங்கச்சி 'பெரியவளாகி'
"குட்டிஅண்ணா வருவியா?"என்றவளுக்கு
"கெதியில வருவன்" என்று
பிஞ்சு மனத்தில் பொய் சொன்னவன்
ஆசையாய் வளத்த அம்மாச்சிக்கு 'பந்தம்' பிடிக்கக்கூட
இந்த பேரனுக்கு பாக்கியம் இல்லை.
என்னைப்பெற்ற அம்மா ஆருமற்ற அனாதையாக ஆசுப்பத்திரியில் படுத்திருந்து
"தம்பி எப்படா பாக்கபோறன்"எனும்போது
சொல்ல 'பதில்' இல்லாதுஏங்கி நின்றவன்.
இப்போதும் மட்டும் என்ன உணர்வு துடிக்கிறதோ?
உள்ளம் கலங்குதோ?
உணர்வு 'பொங்கி' புளியங்குளம் கடக்கவா போகிறேன்...???
இல்லவே இல்லை.
ஆனாலும்......
எனக்குள் இருக்கும் 'மனச்சாட்சி' குத்துகிறது.
தமிழ்பொடியன் என்ற 'தன்மானம்" தவிக்கிது.
'இனவிடுதலை' என்ற 'தாகம்' குருதியில் சுண்டி இழுக்குது.
'மனிதாபிமானம்' என் மனதை குடைகிறது.
என் சனத்துக்காக எவனெவனோ 'நீலிக்கண்ணீர்' வடிக்க
நான் மட்டும் விழியிருந்தும் விசரனாகவா வாழ முடியும்?
எவனோ வருவான் எமக்கு 'விடிவு' தருவான் என
என் இனம் என் சனம் ஏங்கி வாழவில்லை.
கப்பலில் உணவு வருமென காத்துக்கிடக்கவும் இல்லை.
என் தங்கச்சியின் பாவாடை கிழிந்து கிடந்தால்
எனக்குத்தான் 'வெட்கம்'
என் தாயின் சேலையில் பொத்தல் இருந்தால்
எனக்குத்தான் 'அவமானம்'
என் அப்புவின் கோவணம் களவுபோனால்
நான்தான் பொறுப்பு.
என் தம்பி பட்டினியால் அழுதால்
அடுப்பினில் 'உலை' வைக்கவேண்டியதும் நான்தான்.
இதற்காக பக்கத்து வீட்டுக்காரனையா அழுது கூப்பிடமுடியும்?
வேணுமெண்டால் எனக்காக 'ஐயோ பாவம்' என கவலைபட மட்டுமே இயலும்.
அது இருக்க...
உறவுகள் கருகுதையோ...!!!
உலகமே திரும்பிப்பாரடா....!!!
பாரததேசத்தை நாங்கள் பாசத்தோடுதான் பல காலமாக பார்க்கிறோம்.
எமக்கான 'ஆறுதல் கரங்களும் சுமைதாங்கிகளும்'
அங்கே 'ஆயிரம்' உண்டு.
யார் செத்தாலும் எவன் ஆண்டாலும் உறுதியோடு 'கொள்கை சாயாத'
கோபுரங்களும் சில உண்டு.
இருந்தாலும்...
பதவிக்கும் பகட்டுக்கும் 'முதலை கண்ணீர்' வடிப்பவரும் உண்டு.
'எல்லாம்' முடிந்ததும் 'சுயரூபம்' காட்டுபவரும் உண்டு.
எதுவாயினும்....
நாம் எப்போதும் பாரதமாதாவை எங்கள் 'பெரியம்மாவாகவே' நினைக்கிறோம்.
எங்கள் வீட்டில் சாவீடோ? கல்யாணவீடோ?
கட்டாயம் ஒரு அழைப்பு அவர்களுக்கு எப்போதும் உண்டு.
அது இருக்க...
உறவுகள் கருகுதையோ...!!!
உலகமே திரும்பிப்பாரடா....!!!
வான்வழி வரும் 'வல்லூறு' எங்கள் பிஞ்சுகளின் நெஞ்சு பிழந்து
நெருப்பெறிந்து போகிறான்.
கர்ப்பிணிப்பெண்களின் கருக்கலைத்து சிசுக்களின் சின்ன உயிர் தின்கிறான்.
பள்ளி செல்லும் வெள்ளைச்சிட்டுக்களை செங்குருதியில் குளிக்க வைக்கிறான்.
செருக்கோடும் சீரும் சிறப்போடும் பேரோடும் உறவுகளோடு ஊரேறி வாழ்ந்தவர்
தெருவோடு மரநிழலோடும் பசியோடும் நிதம் சாவோடும் வாழ்கிறார்....
தாய்முலை வறண்டு போனதால் சின்னப்பிஞ்சு பசியால் துடித்துச் சாகுது.
பிஞ்சு துடிப்பதை பார்த்து தாய்நெஞ்சு கதறிஅழுகுது
மானுடம் காக்கவல்ல 'மருத்துவம்' கூட எம் மக்களுக்கு
'மருந்துக்கும்' கூட இல்லையே...!
இருப்பினும்......
எங்கள் இனம்...! எங்கள் சனம்...!
'மானம்' இழக்கவில்லை...!!!
'ஈரம்' இழக்கவில்லை...!!!
'வீரமும்' இழக்கவில்லை...!!!
கட்டினால் 'கொண்டை'
வெட்டினால் 'மொட்டை'
எதுவானாலும் எம்தலையிலாகட்டும் என
இறுமாப்போடு வாழும் சனம் எம் சனம்.
இருந்தாலும்.....
எங்கள் சனம் ஏங்கிநிற்பது ஒன்றே ஒன்றுக்குத்தான்.
புலம்பெயர்ந்து புதுவாழ்வு வாழும் தன்னினம்
தனக்காக 'உரிமைக்குரல்' எழுப்பாதா?
தனக்காக 'உதவிக்கரம்' நீட்டாதா?
இதைதவிர்த்து எதையுமே எப்போதுமே கேட்டதில்லை அவர்கள்.
குண்டுச்சத்தங்களும் மரணஓலங்களும் தாயகமண்ணில் கேட்கிறது.
அங்குதான் கேட்கவேண்டும்.
எழுச்சியும் விடுதலைகுரல்களும் உதவிக்கரங்களும் இங்கிருந்து செல்லவேண்டும்.
இங்கிருந்து மட்டும்தான் செல்லவேண்டும்.
உறவுகள் கருகுதையோ...!!!
உலகமே திரும்பிப்பாரடா....!!!
00000000000000000000000000000

என் அப்பு கட்டிய கோவணமே எனக்கு தேசியக்கொடி.!
உனக்கு வேண்டுமானால் பிரான்ஸ் கொடியோ அவுஸ்ரேலியக்கொடியோ தேசியக்கொடியாகலாம்
எனக்கு என் அப்பு கட்டிய கொவணத்துணியே தேசியக்கொடி
ஒடியல் புட்டும் மீன்கறியும் தான் எனக்கு எப்பொதும் தேசிய உணவு.
பிசாவும் மக்கசும் ருசிதான் -ஆனாலும்
அம்மாவின் கைப்பக்குவத்தில் ஆக்கிய நண்டுக்குழம்புக்கு கீழ்தான்
கொள்ளை அழகுதான் பாரிஸ் கோபுரம்-ஆனாலும்
நெடிதுயர்ந்த பனையை விட கொஞ்சம் குறைவுதான்.!
கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னமாகாது
கடல் கடந்தாலும் கலாச்சாரம் மாறாது
நாகரிகம் என்று உன் நல்ல பெயரை நறுக்கி மாற்றலாம்
உன்னுள் ஒடும் உன் தாயின் குருதியை மாற்றலாமோ?
ராப்பும்(துள்ளிசை) பப்பும்(கேளிக்கை விடுதி) உனக்கு அந்த மாதிரி
உடுக்கோசையும் காவடிஆட்டமும்தான் என்றும் எனக்கு முன்மாதிரி
அடையாளங்களை தொலைத்து விட்டு அசிங்கமாய் வாழ்வதைவிட
அம்மணமாக வாழ்வது மேல்.!
அன்புடன்
தமிழ்ப்பொடியன்
09/02/2009
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக